7 ஜூலை, 2012

அன்புமணிக்கு `பிடிவாரண்டு' 20-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழக்கு: அன்புமணிக்கு `பிடிவாரண்டு' 20-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
மத்திய சுகாதார துறை முன்னாள் மந்திரி அன்புமணி. இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து அனுமதி அளித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் அன்புமணி, தற்போது மத்திய அமைச்சரவை செயலகத்தில் துணை செயலாளராக இருக்கும் 

கே.வி.எஸ்.ராவ் (அன்புமணி பதவியில் இருந்த போது மத்திய சுகாதார துறை துணை செயலாளராக இருந்தார்), சுகாதார அமைச் சகத்தின் பிரிவு அலுவலர் சுதர்ஷனகுமார், சப்தர் ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இன்டெக்கில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதோ ரியா, கல்லூரியின் முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ கல்லூரி இயக்குனர் சக்சேனா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கே.வி.எஸ்.ராவ் அரசு உயர் பொறுப்பில் உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கடந்த மே மாதம் 16-ந்தேதி கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தலவந்த்சிங் இந்த வழக்கு விசாரணையை ஜுலை 7-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.

குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட அனைவரும் இன்று நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அன்புமணி உள்பட 10 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அன்புமணி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து நீதிபதி தலவந்த்சிங் அன்புமணிக்கு ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதோடு வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
மதுக்கடைகளுக்கு 11ந் தேதி பா.ம.க. சார்பில் பூட்டுப் போடும் போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்டுரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம். 

சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும்.

தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் மது வெள்ளமாக ஓட அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்து சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.

பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவது தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும் உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக